search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடி பல்சர் பாபு தப்பி ஓட்டம்"

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீ குடித்து கொண்டிருந்த ரவுடி பல்சர் பாபு, போலீஸ்காரர் பைக்கை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டான்.

    ராயபுரம்:

    காசிமேடை சேர்ந்த பிரபல கொள்ளையன் ‘பல்சர்’ பாபு (வயது 30). இவன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி போலீசார் வழிப்பறி வழக்கில் பல்சர் பாபுவை கைது செய்தனர். பின்னர் அவன் குண்டர் சட்டத்தில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தான்.

    இந்த நிலையில் பல்சர் பாபுவுக்கு மூலநோய் பாதிப்பு இருந்தது. இதற்காக அவனை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று அதிகாலை 6 மணி அளவில் பல்சர் பாபு டீ குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் கூறினான்.

    இதையடுத்து அவனை போலீசார் தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியின் எதிரே உள்ள கடைக்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கியதும் அதில் இருந்த சாவியை போலீஸ்காரர் எடுக்க மறந்து விட்டார். மேலும் வண்டி மீது பாதுகாப்புக்கு கொண்டுவந்த ஒரு துப்பாக்கியையும் வைத்து இருந்தனர். பின்னர் போலீசாரும், பல்சர் பாபுவும் கடையில் நின்றபடி டீ குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சாவி இருப்பதை கவனித்த பல்சர் பாபு திடீரென போலீசாரை தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்தான்.

    மேலும் அதிலிருந்த துப்பாக்கியை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டான். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற் கிடையே பல்சர் பாபுவுடன் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர்கள் கஜேந் திரன், சுந்தர் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய பல்சர் பாபுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ×